முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், மனிதப்புதைகுழி அகழ்வில் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றபோது அங்கு செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்ட செயற்பாடு கண்டனத்திற்குரியதென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி மூன்றாம் நாள் அகழ்வாய்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகள் என நம்பப்படும் இருவருடைய மனித எச்சங்கள் முற்றுமுழுதாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனித எச்சங்களில் துப்பாக்கி ரவைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட சில ஆடைகளிலும், உள்ளாடைகளிலும் இலக்கங்கள் இருந்ததையும் அவதானிக்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று கொண்டிருக்கும் போது, இங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களைப் பொலிஸார் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையையும் அவதானிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே இந்த அகழ்வுப் பணி தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறும்போது, ஊடகவியலாளர்களுக்கு செய்திசேகரிப்பதற்கு அனுமதி வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.