நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக திமுக நிர்வாகிகள் 45 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நாளை நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் என்று சொல்லப்படும் திமுக, அதிமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ,தேர்தலை சந்திக்கின்றன.
இந்த சூழலில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த திமுக, அதிமுக உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமைக்கு எதிராக தனித்து களமிறங்க திட்டமிட்டு சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.இதன் காரணமாக திமுக, அதிமுக கட்சியிலிருந்து தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்கள் என கட்டம் கட்டி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே திமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட திமுக நிர்வாகிகள் 100ற்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 45 திமுக நிர்வாகிகள் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுவரை 140க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளை தற்காலிக நீக்கம் செய்துள்ளது கவனிக்கத்தக்கது.