ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே மார்ச் 4-ம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
52 வயது ஆன அவர் தொடர்ச்சியாக கிரிக்கெட் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்த வேளையில் திடீரென்று அவரது இந்த மறைவினை யாராலும் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரைப்பற்றி பல தகவல்கள் வெளிவரும் நிலையில், தற்போது அவர் அதிக உடல் எடை காரணமாக இருந்ததால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அதிக உடற்பயிற்சி செய்தாலே இறந்தார் என்று ஒரு சில செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேப்போல், தான் பிட்டாக மாற வேண்டும் என்று “Operation Shred” என்ற கடுமையான டயட்டை அவர் மேற்கொண்டதால் அதன் பக்க விளைவுகளால் அவரது இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அப்படி இல்லையெனில், அவரின் உணவு பழக்கங்கள், போதை பழக்கம் காரணமாகவும் இந்த மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பலவிதமான கருத்துகளை சமூகவலைதளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஷேன் வார்ன்னின் மரணம் குறித்து தாய்லாந்து நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ஷேன் வார்ன் மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் விடுமுறைக்காக தாய்லாந்து வந்திருந்தனர்.
அப்போது இரவு உணவிற்கு அவர் நண்பர்களுடன் இணையாததால் அந்த நண்பர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர் வார்னை பார்க்க சென்றபோது அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக முதலுதவிக்கு ஆம்புலன்சை அழைத்த அவரது நண்பர் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கியுள்ளனர். ஆனாலும், நிலைமை மோசமானதால் பின்னர் தாய்லாந்து நாட்டின் சர்வதேச மருத்துவமனையில் அவரை அனுமதித்து அங்கும் 5 நிமிடங்கள் தீவிர சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போதும், சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது. அவரின் மரணத்திற்கான காரணங்கள் குறித்து பல மர்மமான விஷயங்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் எங்களை பொறுத்தவரை அவருடைய மரணத்தில் எந்தவித சந்தேகத்திற்குரிய விடயமும் இல்லை. அவரது மரணம் முற்றிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இயற்கையாகவே ஏற்பட்ட மாரடைப்பினால் மட்டுமே நடந்துள்ளது.
இதில் எந்த ஒரு மர்மமோ, சூழ்ச்சியோ கிடையாது என்றும் இயற்கையாகவே உதவி செய்ய முடியாத நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே அவர் உயிர் பிரிந்துள்ளது என்று தாய்லாந்து அரசாங்கம் தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறது.