ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆட்சி கைமாறிய உடன் அதிகார மட்டத்திலும் அதிரடி மாற்றங்களை தலிபான்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி விமானங்களில் தப்பிச்செல்ல ஆப்கானிஸ்தானியர்களோ போக இடமில்லாமல் நரகத்துக்குள் நுழைவதற்கு மனம் ஒப்பாமல் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். விமானத்தின் சக்கரத்தில் ஏறி தப்பித்து விடவேண்டும் என்ற அவர்களின் அச்ச மனநிலை எத்தகையது என்பதை எளிதில் யூகித்துக் கொள்ளலாம்.
அந்தளவிற்கு கொடூர ஆட்சியை 1996-2001 காலக்கட்டங்களில் அரங்கேற்றியர்வகள் தான் தலிபான்கள். இஸ்லாமியத்தின் சுன்னி பிரிவை முன்னெடுக்கும் தலிபான்கள் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சியை நடத்துவோம் என சூளுரைக்கிறார்கள். இச்சட்டத்தின்படி பெண்கள் வீட்டிலேயே தான் முடங்கி கிடப்பார்கள். ஆண்களுக்குக் கூட அங்கே சுதந்திரம் கிடையாது என்பதே நிதர்சனம். பெண்களுடைய நிலைமை எப்படியிருக்கும் என்பதே சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த 20 ஆண்டு காலம் தலிபான்களை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வந்தனர்.
குறிப்பாக முந்தைய ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் அவர்களை எதிர்த்து கருத்துகளை முன்வைத்தனர். ஆனால் இன்றோ அவர்கள் அதிகாரத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் தலிபான்கள் என்ன செய்வார்களோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வேலைக்குக் கூட வராமல் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர். இவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தற்போது தலிபான்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக அறிவித்துள்ள தலிபான்கள் அரசு ஊழியர்கள் தங்கள் மீது முழு நம்பிக்கையுடன் பணிக்கு வருகை தரலாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். தலைநகர் காபூலை கைப்பற்றுவதற்கு முன்னர் காபூல் நுழைவுவாயிலில் நின்றுகொண்டு இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். எங்களுக்கு யார் மீதும் வன்மம் இல்லை; யாரையும் துன்புறுத்த விருப்பமில்லை; அனைவரையும் மன்னித்துவிடுகிறோம்; மரியாதையாக அனைவரும் சரணடைந்து விடுங்கள் என அப்போது கூறியிருந்தது கவனித்தக்கது.