வங்காளதேச விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. விமானம் இந்திய எல்லைக்குள், ராய்ப்பூர் அருகே வந்த போது விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை தரையிறக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி, மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் விமானம் ராய்ப்பூர் அருகில் இருப்பதால் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதோடு கொல்கத்தா விமான கட்டுப்பாட்டுத்தளத்தில் இருந்து நாக்பூர் விமான கட்டுப்பாட்டுத்தளத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வங்காளதேச விமானியும் இது தொடர்பாக நாக்பூர் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனால் நாக்பூர் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. விமானம் எந்தவித பிரச்சினையும் இன்றி பத்திரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
உடனே விமானத்தில் இருந்த விமானி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தக்க நேரத்தில் துணை விமானி விமானத்தை நாக்பூரில் தரையிறக்கியதால் 126 பயணிகள் உயிர் தப்பினர். விமானிக்கு தற்போது நாக்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாக்ப்பூருக்கு வந்த விமான நிர்வாகத்தின் மாற்று குழுவினர், பயணிகளை வங்காளதேசம் அழைத்துச் சென்றனர்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட அந்த வங்காளதேச விமான நிறுவனம் இந்தியாவுக்கான விமான சேவையை நிறுத்தியிருந்தது. சமீபத்தில்தான் அந்நிறுவனம் தனது சேவையை இந்தியாவுக்கு தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.