இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி வல்கம்முல்ல பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று நிலைமையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தேவாலப்பொல பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று மற்றும் மோசமடைந்த நீரிழிவு நிலை அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இரண்டாம் நிலை பக்றீரியா தொற்றால் குருதி விஷமானமை, சிறுநீரக நோய் நிலைமை அவரது மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யட்டியாந்தோட்டையை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவர் ஹோமகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த முதலாம் திகதி உயிரிழந்தார்.
கொவிட் 19 நியுமோனியா, இதய நோய் மற்றும் நீரிழிவு என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, இதுவரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 332 ஆக உயர்வடைந்துள்ளது.