கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதுடன், அறுபத்தியொரு (61) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்கள், பயணக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் பயணித்தவர்கள் என அறுபத்தியொரு (61) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் பதினேழு (17) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வாழைச்சேனை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த கர்ப்பினி பெண் கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு திங்கட்கிழமை பிரசவ அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த கர்ப்பிணி பெண் வயிற்றில் சிசுவுடன் மரணமடைந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பரிசோதனை நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை காவற்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.